கழுகுமலை
-----------------








                                        நான் தற்போது வசித்து வரும் சிவகாசிக்கு அருகில் (38 கி.மீ ) இருந்தாலும் , கழுகுமலை என்ற வரலாற்று  பின்னணியுடைய ஊருக்கு இதுவரை சென்றது இல்லை.இங்கு உள்ள கழுகாசலமூர்த்தி , கல்வெட்டுக்கோயில் மற்றும் சமணர் படுக்கை ஆகியவற்றை காணவேண்டும் என்ற ஆவல் நீண்ட நாளாக மனதில் இருந்தாலும் ,ஏனோ அங்கு செல்வது மட்டும் கைகூடவில்லை. இன்று எப்படியாவது அந்த இடத்தை பார்த்து விடவேண்டும் என முடிவு செய்து , எனது நண்பன்  விக்னேஷ் உடன் புறப்பட்டேன். சிவகாசியிலிருந்து கழுகுமலை செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகியது. கழுகுமலை - சிவகாசி ,கோவில்பட்டி , சங்கரன் கோவில் ஆகிய ஊர்களுடன் தரை வழி இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடன் நாம் காணவேண்டிய கல்வெட்டுக்கோயில் வந்துவிடுகிறது.

                                        மலையின் அடிவாரத்தில் தொல்லியல் துறையினரால் பூங்கா நுழைவுவாயில் நம்மை வரவேற்கின்றது. அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன.  படியேறி  சென்றால் , முதலில் வருவது வெட்டுவான்   கோயில் . இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டபட்டது. அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. காலத்தால் மாமல்லபுர கற்றளிகளுக்கு சற்று பின்னால் ஆக்கப்பட்டதாக இருந்தாலும் இதில் உள்ள சிற்பங்களில் பண்டியர்களுக்கே உரித்தான நுட்பங்களை காணமுடிகின்றது
  
                          வெட்டுவான் கோயில் வரலாற்று சிறப்புவாய்ந்த எல்லோரா கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர்.

                  


இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.











 அடிப்படையில் இந்த கோயில் சிவனுக்காக வெட்டப்பட்டு முடிவுபெறாமல் உள்ளது.வழக்கம்போல் நமது இந்துமத அறிவியல் அறிஞர்கள் இதன் உள்ளே விநாயகர் சிலையை நிறுவி உள்ளனர்.இந்த கோயில் மட்டும் நல்லமுறையில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால் தமிழக கட்டிடக்கலைக்கு மேலும் ஒரு மணிமுடியாக திகழ்ந்து இருக்கும் என்பதை என்னால் ஐயம் இன்றி கூற இயலும்.





                               அடுத்து வருவது சமணர் பள்ளி.சமணர்களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.













                                    இங்கும் ஒரு வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் , நமது இந்துமத அறிவியல் அறிஞர்கள் சமணர் பள்ளி வாயிலை மறித்து - மறைத்து ஒரு அம்மன் கோவிலை கட்டியுள்ளனர். இங்கு ஒரு செய்தியை குறிப்பிட்டாகவேண்டும் , ஏறத்தாழ கிறித்து பிறப்பதற்கு இரு நூற்றாண்டுக்கு முன்பாகவும் ,பின்பு கிறித்து பிறந்து இரு நூற்றாண்டு வரையிலும் தென் தமிழ் நாட்டில் சமண மதமே மிகுதியாக பரவி இருந்த்தது. அந்த காலகட்டத்தில் இப்பகுதிகளில் நிறைய சமணர் படுக்கைகளும் , பள்ளிகளும்  ; அரசர்களாலும் மற்றும் பெருவனிகர்களாலும் கட்டுவிக்கப்பட்டன.இரு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சமண தீர்த்தங்காரர் சிலையை இப்பகுதி மக்கள் , அதை அய்யனார் சிலை என்று கூறி அதை ஒரு கோவிலுக்கு எடுத்து சென்று நிறுவியது நாளேடுகளில் செய்தியாக வந்தது.


                                   இறுதியாக ஊருக்குள் இருப்பது கழுகாசலமூர்த்தி ஆலயம் என்று அறியப்படுகிற முருகன் ஆலயம். இக்கோயிலில் முருகன் மற்றும் சிவன் கோயில்கள் உள்ளது. கோயிலுக்கு அருகில் தெப்பகுளம் உள்ளது. இது தென்பழனி என்றும் அறியப்படுகின்றது. ஆன்மீக அன்பர்களுக்கு மிகுந்த நிறைவை அளிக்ககூடிய கோயில் இது.அனைத்தையும்  கண்ட மனநிறைவோடு , வரலாற்று கால நிகழ்வுகளை மனதிற்குள் சுழலவிட்டபடி ஊர் திரும்பினேன்.



                













                                         
         

Comments

nandhalala said…
Excellent ! These places are Our real treasures not addressed much by the public.... more over expecting you to write regularly in this blog. The way you narrate is quite natural to read and gives the pleasure of visiting the place virtually.
Unknown said…
Nice work Saravana
like to see more like this
all the best
my wishes

Popular posts from this blog

2024 தேவார ஆலய பயணம் - 1

வாய்மை எனும் பொய்மை.