மலை ஏற்றம்.
இந்தியா விடுதலை விடுமுறை இந்த முறை சனிக்கிழமை வந்ததால் இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்தது. ஆகவே எங்கு செல்லலாம் என சிந்தித்துக் கொண்டு இருந்த போது , எனது நண்பர் ஒருவர் அவருடைய மலைத்தோட்டம் இராசபாளயத்திற்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதாகவும் , இரண்டு நாட்களுக்கு அங்கு செல்லலாம் என்று கூறினார். மறுப்பின்றி ஏற்றுக் கொண்டேன்.என்னுடன் மேலும் ஐந்து நண்பர்களும் சேர்ந்துகொள்ள சனிக்கிழமை காலையில் எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். எங்களது பொதிகளை சுமந்து வர மூன்று கழுதைகளும் உடன் வந்தன ஆரம்பமே சற்று அச்சத்துடன் தொடங்கியது. மலையின் அடிவாரத்தில் யானையின் நடமாட்டம் மிகுதியாக இருப்பதால் சற்று நேரம் கழித்து கிளம்பலாம் என்று வழிகாட்டியும் பல பயண அனுபவமுள்ள நண்பர் காளி கூறினார். நிற்க . இங்கு ஒரு செய்தியை நான் குறிபிட்டாகவேண்டும் . மலைத் தோட்டங்களில் வேலை செய்வோர் மலை ஏறும்போது யானையால் நாம் துரத்தப் படாமல் இருக்க கழுதையை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என கூறுகின்றனர். கழுதையிலிருந்து வெளிப்படும் ஒரு நாற்றம் யானையை நமது அருகில் வர விடாது செய்து விடும் என்று கூறுகின்றனர். ...